தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் உள்ள மெப்கோ அரங்கத்தில் 08.10.2014 அன்று ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் நான்காம் ஆண்டுவிழா நடைபெற்றது.
இவ்வாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக “FIEO” Deputy Director திரு.உன்னி கிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டார்கள். மற்றும் தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவரும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷனின் தலைவருமாகிய திரு.S.இரத்தினவேல், ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K.திருப்பதி ராஜன், துணைத் தலைவர் திரு.J.K.முத்து மற்றும் Core Committee உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.
விழாவின் ஆரம்பமாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K.திருப்பதி ராஜன் வரவேற்புரையாற்றிய போது, கடந்த 4 ஆண்டுகளாக இந்த அமைப்பு தென் தமிழகத்தைச் சேர்ந்த வணிகர்களின் வியாபாரத்தை சர்வதேச அளவில் எடுத்துக்கொண்டுபோக வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
அந்நிய செலாவணி என்பது ஒரு நாட்டின் அடிப்படையான விஷயம். இதை ஈட்டுவதில் ஏற்றுமதியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. நம் நாட்டில் ஏற்றுமதி மூலமாக ஏற்படக்கூடிய வருவாய் ஒருபுறமிருந்தாலும் இறக்குமதி மூலமாக நாம் இழக்கும் அந்நியச் செலாவணி 490 பில்லியன் டாலர் ஆகும். அதேவேளையில் 320 பில்லியன் டாலர்களே ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறோம். இதன்காரணமாக இந்தியாவின் வணிக அமைச்சகத்திற்கு பாரத பிரதமர் மோடி அவர்கள், இறக்குமதிக்கு பதிலாக ஏற்றுமதியை அதிகப்படுத்துங்கள் எனக் கூறியிருக்கிறார். இதைத்தான் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் கடந்த நான்கு ஆண்டுகளாக செய்துகொண்டிருக்கிறது என்றார்.
விழாவில் திரு.S.இரத்தினவேல் அவர்கள் உரையாற்றிய போது, தங்களுக்கு போட்டியாக உருவாகிவிடக்கூடாது என்ற “தேவையில்லாத அச்சத்தின்” காரணமாக ஒரு ஏற்றுமதியாளர் தன் ஏற்றுமதி வர்த்தக நடவடிக்கைகள் பற்றி வெளியே சொல்ல மாட்டார். அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் தான் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் என்ற இந்த அமைப்பை உருவாக்கினோம்.
ஒரு அமைப்பை உருவாக்கியதற்கு பின்பே தலைவர் உருவாகுவார். ஆனால், தலைவராக திரு.K. திருப்பதி ராஜன் அவர்களை தேர்ந்தெடுத்த பின்பு தான் இந்த ஏற்றுமதி மேம்பாட்டு மையம் உருவாக்கப்பட்டது. காரணம், தன்னிடமுள்ள ஏற்றுமதி சம்பந்தமான அறிவை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பதில் ஆர்வமாக இருப்பார் என்றார்.
அதேபோல் Risk இல்லாத வணிகம் எதுவுமே இல்லை. அதை அனைத்தையும் சமாளித்து ஏற்றுமதி செய்யவேண்டும். சில நேரத்தில் நாம் தோல்விகளை சந்திக்க நேரிடும். ஆனால் அந்த தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தொடர்ந்து ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மேலும் நன்றாக புரிந்துகொண்டு ஏற்றுமதி செய்தால் Riskகள் குறைவு என்று உறுப்பினர்களுக்கு S.இரத்தினவேல் அவர்கள் அறிவுறுத்தினார்கள். அடுத்த நிகழ்வாக கேக் வெட்டி ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. பின்பு ஏற்றுமதி நடவடிக்கைகளில் வெற்றி பெற்ற 12 உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
விருதுகள் வழங்கும் நிகழ்வை ஒருங்கிணைத்த துணைத் தலைவர் திரு.J.K.முத்து அவர்கள், இன்னும் 5 ஆண்டுகளில் E-Commerce – ன் வளர்ச்சி 70 மடங்கு அளவில் இருக்கும். எனவே E-Commerce வழியாக Export பண்ணுவதற்கு வரும் ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இதில் பெண்களும் முதியோர்களும் ஈடுபடுவது எளிது.
ஏற்றுமதி மேம்பாட்டு மையம் கொடுக்கக்கூடிய பயிற்சிகளை தொடர்ந்து பெற்றுக்கொள்ளவேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றாற்போல ஏற்றுமதியாளர்கள் இணைய தளத்தை பயன்படுத்த வேண்டும் என்று பேசினார்.
இதற்கடுத்த நிகழ்வாக சிறப்பு விருந்தினர் திரு. உன்னி கிருஷ்ணன் அவர்கள் உரையாற்றியபோது, இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்வர்த்தக சங்கங்களில் மதுரையில் உள்ள சங்கம் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. ஏற்றுமதி மேம்பாட்டு மையம் வணிகர்களுக்கு வெற்றிப்பாதையை காட்டுகிறது. ஏற்றுமதிப் பொருட்களை சந்தையில் நிலைப்படுத்தவும் இலக்கை அடையவும் உறுதுணை புரிகிறது. இதற்கான பல்வேறு வாய்ப்புகளை வணிகர்களுக்கு உருவாக்கித்தருகிறது.
Cluster Development Programme எனப்படும் கூட்டுக்குழு மேம்பாட்டு திட்டம் ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்குவது உறுதி.
இந்தியாவில் கடந்த வருடம் ஏற்றுமதி 4 சதவீதம் வெற்றிபெற்றிருக்க தமிழகமோ 6 சதவீதம் வளர்ச்சியை எட்டியிருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் ஏற்றுமதி தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. இலக்கு 5 சதவீதமாக இருக்க வளர்ச்சி விகிதம் 1.7 சதவீதமாக உள்ளது. இன்னும் நாம் இலக்கை அடைய திட்டமிடுதல் அதிக அளவில் தேவைப்படுகிறது. மேலும் இன்னும் பலர் இந்த ஏற்றுமதி துறையில் கால்பதிக்க வேண்டும். பல இளம் தொழில் முனைவோர்கள் இத்துறைக்கு வரவேண்டும்.
நாம் இப்போது செயல்திட்டங்களை வகுக்கிறோம். வர்த்தக கண்காட்சி நடத்த திட்டமிட்டு வருகிறோம். அனைவரும் இந்த கண்காட்சியில் பங்கேற்க வேண்டும். இதனால் ஆப்ரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் ஏற்றுமதி வாய்ப்பு நமக்கு கிடைக்கும்.
ரஷ்யா, பொருளின் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால் ஐரோப்பிய நாடுகளைவிட இந்தியாவிற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலமாக திறன் வளர்ப்பு பயிற்சிகளை நடத்த வேண்டும். தகவல் தொழில்நுட்ப பயிற்சி அவற்றில் முக்கிய இடம் பெறவேண்டும்.
உலக நாடுகளில் இறக்குமதி செய்யும் முதல் 100 பொருட்களின் பட்டியல் இணைய தளத்தில் பெறலாம். அவற்றில் 3 அல்லது 4 பொருட்கள் மட்டுமே இந்தியாவிலிருந்து ஏற்றுமதி ஆகின்றன. நாம் முயன்றால் இன்னும் ஏராளமான பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்.
வழக்கமாக நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களை கூட நாம் நடப்பு காலத்தின் புதிய தேவைகளுக்கேற்ப நவீனப்படுத்துவதில்லை. அவ்வாறு நவீனப்படுத்தி ஏற்றுமதி செய்தால் ஏற்றுமதி துறை இன்னும் பிரகாசிக்கும்.
தற்போது ரஷ்யா நமக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் வழங்கிவருகிறது. எனவே ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுவினர் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். மேலும் இன்னும் நிறைய உறுப்பினர்கள் இக்குழுவில் சேர்ந்து சிறந்த ஏற்றுமதியாளர்களாக உருவெடுக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இக்குழுவை வழிநடத்திச்செல்லும் திறமையானவர்களாக திரு.K.திருப்பதி ராஜன் அவர்களும் திரு.J.K.முத்து அவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தன் உரையை நிறைவு செய்தார். இறுதி நிகழ்வாக Core Committee உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.