தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் 5வது ஆண்டு விழா 27-10-2015 அன்று ஹட்சன் அரங்கத்தில் தலைவர்கள் பங்கேற்க உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு உதயம் நெய் நிறுவனத்தின் ஸ்தாபகர் G.R.BALASUBRAMANIAM (Managing Director, GRB Dairy Foods Pvt.Ltd.) அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதலில் வரவேற்புரையாற்றிய ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K.திருப்பதி ராஜன், இம்மையத்தின் சிறப்புகளை பற்றியும் தலைவர்களை பற்றியும் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
குறிப்பாக, “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்ற வாசகம் தான் இந்த விழா அரங்கிற்கான தாரக மந்திரம் என்றும் நாங்கள் ஏற்றுமதியாளர்களை மட்டும் உருவாக்கவில்லை. தலைவர்களையும் உருவாக்கியுள்ளோம் என்று அமைப்பின் பெருமிதத்தை விழா அரங்கில் பகிர்ந்து கொண்டது சுவாரஸ்யமாக இருந்தது.
அடுத்ததாக EPC பற்றிய ஒரு DOCUMENTARY வீடியோவும் இந்த அமைப்பு சமூக மாற்றத்தை உண்டாக்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எப்படி முக்கிய பங்காற்றுகிறது என்பதை விளக்கும் மற்றொரு வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது.
விழா அரங்கின் முக்கிய உரையாக சங்கத்தின் முதுநிலைத்தலைவர் திரு.S.இரத்தின வேல் அவர்கள் பேசுகையில், இவ்வமைப்பு துவங்கப்பட்ட போது, முதலில் உறுப்பினர்களுக்கு ஏற்றுமதி குறித்த பயத்தை நீக்கி நாட்டை தேர்வு செய்வது, அந்த நாட்டின் பழக்க வழக்கங்களை சொல்லி கொடுப்பது, பொருளை தேர்வு செய்வது என ஒரு உறுப்பினரை “கையை பிடித்து அழைத்து செல்வது போல” ஏற்றுமதியாளர்களை உருவாக்குகிறோம்.
சமீப காலங்களில் ஏற்றுமதி, இறக்குமதி சரிவை சந்தித்தாலும் நமது உறுப்பினர்கள் நன்றாக ஏற்றுமதி செய்கிறார்கள். அதேபோல் ஒவ்வொரு உறுப்பினரும் சொத்து வாங்குவதை விட ஒரு BRAND -ஐ தனது நிறுவனத்திற்காக உருவாக்குவது சிறந்தது என்று பேசினார். அடுத்ததாக சங்கத்தின் தலைவர் திரு. N.ஜெகதீசன் அவர்கள் பேசும் போது, 2010ம் ஆண்டில் 75 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஏற்றுமதி மேம்பாட்டு மையம், தற்போது 275 உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக இளம் தொழில் முனைவோர் மையத்திற்கு போட்டியாக சேவையாற்றி வருகிறது.
நமது நாட்டில் ஏற்றுமதிக்கு வாய்ப்புகள் சாத்யமாக இருந்தாலும் இறக்குமதியை கண்டிப்பாக குறைக்க வேண்டும். முக்கியமாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்வதில் முதன்மையாக இருக்கிறது. அதேபோல் சீனா, ஏற்றுமதியை மட்டுமே ஊக்குவிப்பதால் தன்னுடைய நாட்டின் பொருளாதாரத்தை ஒவ்வொரு ஆண்டிலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறது என ஏற்றுமதியின் மகத்துவத்தை பற்றி பேசினார்.
மேலும் EPC யின் முன்னாள் துணைத் தலைவரும், DIGIT ALL அமைப்பின் தலைவர் திரு.ஜே.கே.முத்து அவர்கள் பேசியபோது, ஏற்றுமதியாளர்களை மட்டும் EPC உருவாக்குவதில்லை. அவர்களுக்கு PRODUCT SELECTION முதல் RISK MANAGEMENT வரை அனைத்தையும் சொல்லித்தந்து ஏற்றுமதி பற்றிய அறிவை கொடுக்கிறது. இருப்பினும் ஒரே பொருளை மட்டும் தேர்வு செய்து ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்கள், தங்கள் துறை சார்ந்த மேலதிகமான புரிதல்களை பெற CLUSTER எனும் அமைப்பை தோற்றுவித்து அதன் மூலம் ஏற்றுமதி செய்யும் திறனை அதிகப்படுத்துகிறது. அதிகமான நபர்கள் சேர்ந்து ஒரு பொருளை, அதிகமாக உற்பத்தி செய்தால் அதன் விலையை குறைக்க முடியும், வாங்கும் திறனும் கூடும், கொள்முதல் லாபமும் கிடைக்கும் நோக்கில் இந்த முறை ஆரம்பிக்கப்பட்டது என பேசினார்.
மேலும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்திற்கு கடந்த 5 வருடங்களாக தன் முழு அறிவுத்திறனையும் கொடுத்து பல ஏற்றுமதியாளர்களை உருவாக்கிய பெருமைமிக்க திரு.ஜே.கே.முத்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவில் சிறப்புரையாற்றிய திரு. G.R.BALASUBRAMANIAM அவர்கள் பேசும் போது, தான் சிறு வயதில் எனது அக்கா வீட்டில் வளர வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஒரு நாள் என் அப்பாவிடம் சென்று நான் படிக்க விரும்புகிறேன். சொந்த ஊருக்கு வர வேண்டும் என்று சொல்ல, அன்று என்னை ஹோட்டலுக்கு அழைத்துச்சென்று நான் கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்தார். எனக்கு மிகவும் சந்தோஷம். ஆனால், அடுத்து என் அப்பா சொன்னது … உனக்கு உனது அக்கா வீடு தான்! உன்னுடைய முன்னேற்ற பாதையை அமைத்துக்கொள் என்றார். அந்த நேரத்தில் எனது தந்தையின் இந்த கண்டிப்பு என்னை தொழிலில் வெற்றி அடைய செய்துள்ளது என்றார் நெகிழ்வாக …
1984ம் ஆண்டில் வீடு வீடாக நெய்யை விற்றுக் கொண்டிந்தோம். 1993 -1994 ம் ஆண்டுகளில் தான் நெய்யை ஹார்லிக்ஸ் பாட்டிலில் அடைத்து கடைகளுக்கு கொண்டுபோய் விற்போம். இந்த பாட்டில்கள் உடைய ஆரம்பித்தபோது இதற்கு மாற்றுவழி ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது. அப்போது தான் டெல்லியில் உள்ள ஃப்ளெக்ஸ் என்ற கம்பெனியிடன் ப்ளாஸ்டிக் பவுச்சிற்காக ரூபாய் 1 லட்சத்திற்கு முதலீடு செய்து இதற்கான மாற்றத்தை கொண்டு வந்து அதில் வெற்றி கண்டேன் என்றார்.
நாம் ஒரு வணிகம் செய்து கொண்டிருக்கையில் அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும், அதில் ஒரு வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்ற நோக்கில் இந்த ப்ளாஸ்டிக் பவுச்சை தேர்ந்தெடுத்து அதில் நெய் நிரப்பி விற்பனை செய்து வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொண்டோம் என்றார்.
மேலும் வணிகர்கள் தங்கள் வணிகத்தில் அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப கடன் வாங்க வேண்டும். அதாவது, எந்த சூழ்நிலையிலும் தம்மால் திருப்பி கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே கடன் வாங்குவது நல்லது. இல்லையென்றால் அந்த வணிகம் நொடிப்பு நிலையை சந்திக்க நேரிட்டால் சமாளிக்க முடியாது என்று அறிவுரை வழங்கினார்.
அதேபோல் தற்போதுள்ள வணிகர்கள் வீடு, நிலம், சொத்துக்கள் வாங்குவதை விட ஒரு BRAND – ஐ உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் அதுவே நம்முடைய சிறப்புமிகு சொத்து என அதன் முக்கியத்துவத்தை விளக்கியதுடன் ஒவ்வொருவரும் ஏற்றுமதி செய்ய முயற்சி செய்யுங்கள் என்பதே தன்னுடைய முக்கியமான அறிவுரை என கூறினார்.
இந்நிகழ்வில் முதன்முறையாக ஏற்றுமதி செய்து வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முதன்முறை ஏற்றுமதியாளர் விருது பெற்றவர்கள்:
- திரு.ரமேஷ்
- திரு.டேவிட்
- திரு.ராஜ கார்த்திகேயன்
- திரு.அருண் பிரகாஷ்
- திரு.மணிகண்டன்
- திரு.ராஜ்குமார்
இதேவேளையில் தொடர்ச்சியாக சில வர்த்தகர்கள் ஏற்றுமதி வணிக்கத்தில் சிறந்து விளங்கின்றமைக்காகவும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஏற்றுமதியில் சிறப்பான பங்களிப்பு கொண்டோர்:
- திரு.சாய் சுப்ரமணியம்
- திரு.ராஜ்குமார்
- திரு.கோவிந்தராஜ்
- திரு.ராமகிருஷ்ணன்
மேலும் AGRIMINE – ஐ BRAND ஆக உருவாக்கி ஏற்றுமதி செய்தமைக்காகவும்
அதன் இயக்குனர்களாகிய …
- திரு.S.இரத்தினவேல்
- திரு.N.ஜெகதீசன்
- திரு.ராஜ்மோகன்
- திரு.சுரேஷ்குமார்
- திரு.ரவிக்குமார்
- திரு.K.திருப்பதி ராஜன்
- திரு.S.ராம கிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக விருதை பகிர்ந்து கொண்டனர்.
விழாவின் இறுதியாக நன்றியுரை ஆற்றிய திரு.ஜே.கே.முத்து அவர்கள், சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்த அனைவருக்கும் தன் நன்றியை கூறினார்.
தான் EPC, YES, அமைப்பு நண்பர்களுடன் பேசுகையில், “பிராண்ட் இல்லாமல் வியாபாரம் செய்வது, மற்றவரது குழந்தையை நாம் வளர்ப்பது போல” அந்த குழந்தை எப்போது வேண்டுமானாலும் நம்மை விட்டு செல்ல வாய்ப்பு இருக்கின்றது என்று, தான் அடிக்கடி குறிப்பிடுவதாக சொன்னார்.
சமீபத்தில் YES அமைப்பின் மூலம் (BISCOVER) America சென்ற போது அங்குள்ள அமைச்சர் ஒருவர், அமெரிக்கா 99 சதவீதம் பிராண்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஆனால் இந்தியா வெறும் 1 சதவீதம் மட்டுமே கொடுப்பதாகவும் குறிப்பாக அந்த 1 சதவீதம் கூட வட இந்தியா தான், என தன் நன்றியுரையில் பிராண்டின் அவசியத்தை உணர்த்தினார்.